நான் பெங்களூர் வந்த சமயத்தில் நண்பர்களோடு அடிக்கடி சுற்றித் திரிவது வழக்கம். பெங்களூர் வரும் முன்பே இங்கிருக்கும் மகாத்மா காந்தி சாலையை (M.G. Road) பற்றி நிறைய கேள்விப் பட்டிருந்தேன். "அப்படி என்ன தான் இருக்கிறது ? பார்க்கலாம்" என்று ஒரு நாள் மாலை கிளம்பிச் சென்றோம்.
M.G. Road அருகிலிருந்த Brigade Road-ல் நிலக்கடலை வாங்கி கொறித்துக் கொண்டே நடை போட்டோம். எதிர்ப்பார்த்து வந்த அளவிற்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. விரைவாக இயங்கிக் கொண்டிருந்த நகர வீதி; பெரிய பெரிய வணிக வளாகங்கள்; எங்களைப் போலவே சுற்றிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம்.
சிறிது தூரம் சென்ற பிறகு தான் கவனித்தேன், அந்த இடத்தைச் சுற்றி நிறைய பொது விடுதிகள் (pubs) இருந்தன. ஆண் பெண் வித்தியாசம் பாராமல் குடித்துவிட்டு கூத்தாடும் கலாச்சாரம். இவர்கள் பாதுகாப்புக்காக ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் வில்லன்கள் போல் கோட்டு-சூட்டு போட்ட அடியாட்கள். "ஓ, இதற்குத் தான் இந்த இடம் பிரசித்தமோ ! நமக்கேன் வம்பு.." என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தோம்.
சற்றுக் கடைகளுக்குள் சென்று பார்க்கலாம் என்றால், எல்லாம் யானை விலை, குதிரை விலை. கேட்டால் "Branded" என்று பதில் வரும். அது என்னவோ, நாம் எதுவும் வாங்க வரவில்லை என்று நினைத்துக் கொண்டே, ஆங்கிலத்தில் ஸ்டைலாக சொல்வார்களே Hands-Free Shopping, அதாவது "வெறுங்கை வியாபாரம்", அதைச் செய்துவிட்டு வெளியேறினோம்.
"ஓ, இது பணக்காரர்களின் வீதியோ ?" என்று அண்ணார்ந்து பார்த்து யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், "அண்ணா" என்றது ஒரு குரல். இந்த ஊரில் நம்மை யார் "அண்ணா" என்றழைப்பது என்று குனிந்து பார்த்தால், கிழிந்த சட்டை, அழுக்கு டவுசர் - பிச்சை எடுக்கும் சிறுவன்.என் கணிப்பு தவறு தான். இந்தியாவில் அப்படி ஒரு வீதி இல்லை. எனக்கு இரண்டு விஷயங்கள் ஆச்சர்யம் கொடுத்தன. ஒன்று, இங்கு நான் கன்னடத்தில் பேசினால் கூட என்னைத் தமிழன் என்று சரியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள் (இன்று வரை). என் முகத்தில் என்ன எழுதியா ஒட்டியிருக்கிறது என்று கூட நினைத்ததுண்டு. இரண்டு, இங்கே நான் பார்க்கும் பிச்சைக்கார சிறுவர்களில் முக்கால்வாசிப் பேர் தமிழர்கள். சொந்த ஊர் எது என்று கேட்டால், ஓசூர், கிருஷ்ணகிரி என்பார்கள்.
இது போன்ற சிறுவர்-சிறுமிகளைப் பார்க்கும்போது, அழைத்துக் கொண்டு போய் எங்கள் ஊர் தொடக்கப்பள்ளியில் கொண்டு போய் சேர்த்து விடலாம் என்று தோன்றும். வீதியில் சந்திக்கும் எத்தனையோ சிறுவர்களை அழைத்திருக்கிறேன். பெயருக்காக கூட ஒருவரும் "வருகிறேன்" என்று சொன்னதில்லை. எப்படி திட்டினாலும், கண்டும் காணாதவர்கள் போல் திரும்பி நின்றாலும், முதுகைச் சுரண்டிச் சுரண்டித் தொல்லை செய்பவர்கள் கூட, இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் உடனே ஒதுங்கிச் சென்று விடுவார்கள். படிப்பது என்ன பிச்சை எடுப்பதை விட கொடுமையானதா ? எனக்கு புரியவில்லை.
சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். என்னை அழைத்த அந்த சிறுவனிடமும் அதே விளைவைத் தான் எதிர்ப்பார்த்தேன். "என்னடா, என் கூட வரியா ? ஸ்கூல்ல சேத்து படிக்க வைக்கிறேன்." என்றேன். முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கைகள் மட்டும் காசு கேட்டு மேலும் கீழும் அல்லாடிக் கொண்டிருந்தன. நான் மறுபடியும் கூறினேன், "காசெல்லாம் குடுக்க மாட்டேன். கூட வரேன்னு சொல்லு, கூட்டிட்டு போய் சட்ட துணி மணி வாங்கித்தறேன், பள்ளிகூடத்துல சேத்து விடுறேன்". அவனிடம் எந்த பதிலும் இல்லை. நண்பர்களும் அவனுக்கு காசு கொடுக்கவில்லை. "வரலைல, கிளம்பு, இங்க நிக்காத, கிளம்பு"- என்றேன். உடனே சொன்னான், "ஆமாம் சார், இப்படி சொல்லி கூட்டிட்டு போவீங்க, அப்புறம் அடுத்த பஸ் ஸ்டாப்ல எறக்கி விட்டுட்டு போயிருவீங்க. அங்கேந்து இங்க வரைக்கும் நான் தான் நடக்கணும். போங்க சார்" என்று சொல்லிவிட்டு அடுத்த Customer-ஐ நோக்கி நடந்தான்.ஒரு நிமிடம் சுரீர் என்றது, "இப்படி கூடவா செய்கிறார்கள்" என்று.
இன்று யோசிக்கிறேன், அவன் வருகிறேன் என்று கூறியிருந்தால், நானும் இதைத் தான் செய்திருப்பேனோ ? தெரியவில்லை..
2 comments:
nice article da :) but shocking too.
Why shocking da?
Post a Comment