Tuesday, October 30, 2012

முற்போக்குச் சிந்தனை

"அது கடவுள் இல்லை, கல்"
என்ற தலைவனின்
சிலைக்கு மாலை அணிவித்து
கோஷமிட்டான்
பகுத்தறிவுவாதத் தொண்டன் !

Friday, October 19, 2012

தூவானம்

உன் மேனியை தழுவ
மேகங்கள் செய்யும்
 நீர்ப்பூக்கள் அர்ச்சனை !

Monday, October 8, 2012

தனி மனித ஒப்பீடு

பரிணாம வளர்ச்சியின் முதுகெலும்பாக கருதப்படுவது "ஒப்பீடு". மனித வாழ்க்கையின் சிறு சிறு அறிதலிலும் புரிதலிலும் ஊடுருவிப் பார்த்தால் நாம் சென்றடையும் மையக் கருத்தாக்கம் இந்த "ஒப்பீடு" தான் (குழந்தை தாய்க்கும், தந்தைக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்வது ஒப்பீடு மூலம் தான் என்பது ஒரு உதாரணம்). ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைச் சுற்றி உள்ளவற்றுடன் தன்னை ஒப்பிட்டு தான் தன்னை புரிந்து கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் முயல்கிறான் என்கிறது "சமூக ஒப்பீடு கோட்பாடு" (Social Comparison Theory). இந்த ஒப்பீடு வெளியிலிருந்து நமக்குள் திணிக்கப் பட்டால், அது ஏற்படுத்தும் விவரிக்க முடியாத அழுத்தங்களைப் பற்றி நான் சொல்ல விழைவது தான் இந்த "தனி மனித ஒப்பீடு" (Individual comparison).

ஒப்பீடுகளின் நன்மை தீமைகளை அலசி ஆராய்வதற்கோ, தர்க்கம் செய்வதற்கோ இங்கு இதை நான் எழுதவில்லை. ஒப்பீடுகள் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்வது எப்படி என்ற வலையைப் பின்ன நான் கொடுக்கும் ஒரு சிறு நரம்பு தான் இந்த கட்டுரை. மற்றவர்களோடு நம்மை நாமே ஒப்பிட்டு நம் ஆற்றலை புரிந்து கொள்ள முயற்சிப்பதற்கும், அது மற்றவர்கள் மூலம் நம் மீது திணிக்கப்படும்போது ஏற்படும் விளைவுகளுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன. இது ஏதோ சாமானியனுக்கு மட்டும் ஏற்படும் அனுபவம் அல்ல. பல சாதனைகள் புரிந்தவர்களும் சந்திக்கும் ஒருவகையான நிர்பந்தம் தான் இந்த தனி மனித ஒப்பீடு. ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று நாம் நினைத்தாலும், அவர்களுக்கு அது பழகிப் போய் விடுகிறது என்பதுதான் உண்மை.

இதன் அடிப்படையை விளக்க ஒரு பழமொழியை உதாரணமாக கொள்வோம்:

"உயர உயர பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகாது"

இதைப் படிக்கும்போதோ, எழுதும்போதோ எனக்கு எப்பொழுதும் ஏற்படும் ஒரு சந்தேகம், "குருவியை பருந்தோடு அனாவசியமாக எதற்காக ஒப்பிட வேண்டும் ?" என்பது தான். ஒரு குருவி அதன் தகுதியை மீறி கடும் முயற்சியால் இவ்வளவு உயரம் பறக்கிறதே என்று பாராட்டுபவர்களை விட, அதைக் கழுகுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுபவர்களே அதிகம் உள்ளனர். இது போன்ற விமர்சனங்கள் இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தும்; ஒன்று - தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex), இரண்டு - மனச்சோர்வு (Dejection). 

இதில் தாழ்வு மனப்பான்மை நம்முடைய திறமைகளை வெளிக்கொணர உதவும் உந்து சக்தியை குறைத்துவிடும். மனச்சோர்வோ, நாம் எது செய்தாலும் அது பாராட்டப்பட போவதில்லை என்று மற்றவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும். இது பின்னாளில் நாமும் இது போலவே மற்றவர்களை பாராட்ட தெரியாமலும், மட்டம் தட்டும் மனோபாவத்தையும் கொண்டவர்களாக வளரவே வழி வகுக்கும்.

"அவனப் பாரு எப்படி படிக்கிறான்னு. நீயும் இருக்கியே", "அவன் அவன் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறான். உன்னால ஏன் முடியல ?", "நீ விளையாடி கிழிச்சது போதும், அவள மாதிரி எப்ப பர்ஸ்ட் ரேங்க் வாங்கப் போற", போன்ற வசனங்கள் (வசவுகள்) நாம் பெரும்பாலும் கேட்டுப் பழகியவையே. இவை இது வரை யாருக்கும் நேர்மறையான விளைவுகளைத் தந்ததில்லை. மாறாக இப்படி சொல்பவர்களின் மேல் வெறுப்பைத் தான் ஏற்ப்படுத்தி இருக்கின்றன. இதற்கு பதிலாக, "நீ நல்லா தான் விளையாடுற. கூடவே படிப்பையும் கவனிச்சா இன்னும் நல்லா வருவ", "நீ வாங்குற சம்பளம் இப்பதைக்கு போதும் தான். ஆனா இன்னும் நல்ல வேலைக்கு முயற்சி பண்ணலாமே" போன்ற அக்கறையான வார்த்தைகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.

திட்டி வேலை வாங்குவதை விட, தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது சிறந்தது என்பது போல, ஒப்பிட்டு குறை சொல்வதை விட, ஊக்குவித்து கற்பிப்பதே சிறந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ ?

ஏக்கம்

சகியே,
உன் சுட்டெரிக்கும் பார்வை தன்னில்
சொக்கித் தான் போனேனடி
சட்டென்று தோன்றவில்லை
சங்கத்தமிழ் கவிதை சொல்ல

உன் தாவணியின் வண்ணங்களில்
வானவில்லை கண்டேனடி
வான்மழையை காணவில்லை
மேகங்களில் தூது செல்ல

உன் காலடியில் தவமிருந்து
காலங்கள் கரைந்ததடி
உன் எண்ணங்களில் மாற்றமில்லை
என் காதல்தனை ஏற்றுகொள்ள !

Wednesday, October 3, 2012

வானிலை அறிக்கை

கடக ரேகை
மகர ரேகை
பூமத்திய ரேகை
- பூமிக்கு
ஆரூடம் சொல்கிறது
வானிலை ஆய்வு மையம் !

Tuesday, September 25, 2012

கானல் நீர்

"I know only one culture - That is Agriculture." - சர்தார் வல்லபாய் படேலின் வார்த்தைகள் இவை. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் ஏற்ப்பட்டு வந்தாலும், விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்த வலைப்பூவில் என் வார்த்தைகளைக் கோர்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம், இணையம் பற்றி இம்மி அளவும் தெரியாமல் நம் நாட்டின் எங்கோ ஓர் மூலையில், வயல் வெளியில் விதைத் தூவிக் கொண்டிருக்கிறான் ஒரு விவசாயி என்பதை நம்மால் மறுக்க முடியாது. அவன் நம்பி இருப்பது நிலங்களையும் நீர் நிலைகளையும் மட்டுமே.
 
பெரும்பகுதி தமிழ் நாட்டு விவசாயிகளை வாழ வைப்பது இரண்டு தாய்மார்கள்; ஒன்று பூமித் தாய், மற்றொன்று காவிரித் தாய். ஒரு தாய் விலை மகளாக மாறி வருகிறாள். விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி வருகின்றன. அதைக் கண்டும் காணாதது போல் வெட்கமின்றி அதில் பங்கெடுத்துக் கொள்ளும் தனயன்களாய் நிற்கிறோம் நாம். மற்றொரு தாயோ, பிறந்த வீட்டிலேயே சிறைப்பட்டு கிடக்கிறாள். காவிரித் தாய்க்கு கர்நாடக மக்கள் வேறு, தமிழக மக்கள் வேறோ ? ஒரு தாய் மக்களுள் வேற்றுமை ஏது ? இடர்கால பகிர்வுப் படி நீர் வழங்கக் கூட கர்நாடக அரசு மறுக்கிறது. பிரதமர் பேச்சுக்கோ, நீதி மன்ற உத்தரவுகளுக்கோ மரியாதை இல்லை.
 
வான் மழை பொய்த்து, பயிர்கள் வாடும்போதெல்லாம், காவிரி நீரை நம்பியே காலத்தைப் போக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். வரும் காலங்களில் நீராதரங்களும், நிலத்தடி நீர்வளமும் வற்றி போகும் நிலை ஏற்பட்டால் நமக்கு மிஞ்சப்போவது, மெருக்கேற்றப்பட்ட தார் சாலைகளில் சுட்டெரிக்கும் வெயிலில் ஐம்பதடி தூரத்தில் மட்டுமே தென்படும் கானல் நீரும், மலடாய்ப் போட பூமியை நம்பி ஏமாந்து போன விவசாயியின் கண்ணீரும் மட்டுமே.
 
நீரில்லாமல் வாடுவது பயிர்கள் மட்டுமல்ல, அதை நம்பி உள்ள பல வயிறுகளும் தான் என்பதை அரசாங்கங்கள் புரிந்து கொள்ளும் நாள் எப்போது வருமோ ?

Monday, September 24, 2012

தள்ளாமை

உதிர்ந்து விழுந்த சருகைப் பார்த்து சிரித்தன
கிளையில் புதிதாய் முளைத்த இலைகள்
நாமும் ஓர் நாள் உதிர்வோம்
என்று அறியாமல் !

Tuesday, February 14, 2012

நேசம்

என் மனதில் விழுந்த
அத்தனை கீறல்களையும் தாண்டி
அழகாய் மிளிர்கிறது
உன் விழிகள் வரைந்த
காதல் !

Friday, February 3, 2012

ஒழுங்கின்மை கோட்பாடு

உன் இமை படபடக்கும்போதெல்லாம்
புயலடிக்கிறது என் இதயத்தில்.
இதற்கு பெயர் தான்
"பட்டாம்பூச்சி" விளைவோ ?

குறளோசை