Thursday, January 24, 2013

ஆர்வக் கோளாறு

என் பார்வையின் ஓரத்தில்
காற்றில் மிதந்தது குப்பைக் காகிதம்
சிறு பறவையோ என்றெண்ணி
சட்டென்று திரும்பி ஏமாந்தன என் விழிகள் !

என் சாலையின் ஓரத்தில் 
இலைகளையும் கிளைகளையுமே வெறித்துப் பார்த்துக் கொண்டும், 
எதிர்வரும் வாகனங்களைக் கண்டு விலகக்கூடத் தோன்றாமல் 
அதன் வண்ணங்களை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறது என் மனது !

என் ஜன்னலின் ஓரத்தில்
அமாவாசை என்று கூட அறியாமல்  
நிலவின் வருகைக்காக 
ஏங்கித் தவிக்கிறது என் எண்ணம் !

கா கா என்று கரைந்தபோது 
தடி கொண்டு விரட்டியவன் 
இன்று அந்த குரல் கேட்டவுடன் 
சற்றும் சலனமின்றி அருகில் சென்று நோட்டமிடுகின்றேன் !

"அங்க என்ன நிலாவா காயுது ?"
என்ற என் மனைவியின் கேள்வி
காதில் விழாதவனாய் மொட்டை மாடி வெயிலில்
வட்டமிடும் பருந்தை வேடிக்கை பார்த்து நிற்கின்றன என் கால்கள் !

நேற்றுவரை சாதாரணமாகத் 
தோன்றியவை எல்லாம்
திடீரென்று வியக்க வைக்கிறது 
இன்று முதல் !

இது என்ன மன நோயா ?

ஆம் - விழி உறங்கும்பொழுது கூட 
மனம் உறங்கவிடாமல் துடிக்க வைக்கிறது
நான் புதியதாய் வாங்கிய 
நிழற்படக் கருவி  !!

குறளோசை