Thursday, May 9, 2013

பொன் காலைப் பொழுது

குயில் குரல் கேட்டு கண் விழித்தேன்
கார்மேகமூட்டத்தினூடே 
செந்நிறப் பிழம்பாய் தோன்றியது சூரியன் 
அவ்வொளியை நோக்கி 
பறந்து கொண்டிருந்தன இரு பறவைகள் 
வெண்மலர்களின் நடுவில்
நாட்டியமாடின கருவண்டுகள்
சிறு  குன்றொன்றுக்கு அப்பால் 
செஞ்சிப்பிக்குள் பளபளத்தன வெண் முத்துக்கள்
முழு நிலவிற்குள் அடங்கி போயிருந்தன 
இவ்வனைத்தும் !

இமைகள் மெல்ல விரிகையில்,

"அத்தான்" என்ற உன் அழைப்போடு
உன் கருங்கூந்தல் என்னை வருட
உன் புருவங்களிடையில் 
பதிந்திருந்த வட்ட பொட்டு ஒளி வீச
துருதுருவென்று அலைந்து கொண்டிருந்த 
உன் கருவிழிகளின் கீழிருந்த 
கூர் மூக்கைத் தாண்டி
செவ்விதழ் சிந்திய புன்சிரிப்போடு
உன் வட்ட முகம் பார்த்து 
விடிந்துகொண்டிருந்தது என் காலைப் பொழுது  !

குறளோசை