Sunday, July 24, 2011

தேடல்..

பகலிலும் உதிக்கும்
நிலவு நீ !

துயிலெழுந்த பின்னும் தொடர்கின்ற
கனவு நீ !

பூவுக்குள் வீசும்
புயல் மழை நீ !

புன்னகையால் பேசும்
புது மொழி நீ !

மண்ணிலும் தோன்றும்
மின்னல் நீ !

விண்ணிலும் முளைக்கும்
மலர்க் கொடி நீ !

தேடுகிறேன் உன்னை
என் கண்மணிகள் தேயும் வரை
வாடுகிறேன் அன்பே
நீ என் வாசல் சேரும் வரை !!

Sunday, July 10, 2011

மாயை

நிலவிடம் ஒளியை
கடன் வாங்க நினைதேன்,
பிறகு தான் அறிந்தேன்
நிலவே ஒரு கடனாளி என்று..

தேன்கூட்டுத் தேனை
களவாட நினைத்தேன்,
பிறகு தான் அறிந்தேன்
தேனீயே ஒரு களவாணி என்று..

உலகையே எனக்கு
சொந்தமாக்க நினைத்தேன்,
பிறகு தான் உணர்தேன் - என்
உயிரே எனக்கு சொந்தமில்லை என்று !!

Tuesday, July 5, 2011

சொல்லத்தான் நினைக்கின்றேன்..

அடிக்கடி அலைபேசினாய் - உன்
கண்களால் வலை வீசினாய் - என்னை
காதலால் விலை பேசினாய் !
 
மலை என்று நினைத்திருந்தேன் - நான்
மடுவென்று உணர்த்திவிட்டாய்
வானுயர நின்றிருந்தேன் - உன்
வார்த்தைகளால் வீழ்த்திவிட்டாய் !
 
ஆயிரம் பேர் மத்தியிலே
அனல் வீசப் பேசியவன் - உன்
காதருகே பேசக் கூட
கண்டபடி யோசிக்கிறேன் !
 
சூழ்நிலையின் சூழ்ச்சிதனில் - நான்
சுண்டெலியாய் மாட்டிக்கொண்டேன்
நம் காதலதன் கைப்பிடியை
காலத்திடம் விட்டுவிட்டேன் !
 
காத்திருப்பேன் கண்மணியே
கதிரவனின் பார்வை பட
பூத்திருப்பேன் பொன்மணியே
பொன்காலை விடியல் வர !!

குறளோசை