Tuesday, September 25, 2012

கானல் நீர்

"I know only one culture - That is Agriculture." - சர்தார் வல்லபாய் படேலின் வார்த்தைகள் இவை. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் ஏற்ப்பட்டு வந்தாலும், விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்த வலைப்பூவில் என் வார்த்தைகளைக் கோர்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம், இணையம் பற்றி இம்மி அளவும் தெரியாமல் நம் நாட்டின் எங்கோ ஓர் மூலையில், வயல் வெளியில் விதைத் தூவிக் கொண்டிருக்கிறான் ஒரு விவசாயி என்பதை நம்மால் மறுக்க முடியாது. அவன் நம்பி இருப்பது நிலங்களையும் நீர் நிலைகளையும் மட்டுமே.
 
பெரும்பகுதி தமிழ் நாட்டு விவசாயிகளை வாழ வைப்பது இரண்டு தாய்மார்கள்; ஒன்று பூமித் தாய், மற்றொன்று காவிரித் தாய். ஒரு தாய் விலை மகளாக மாறி வருகிறாள். விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி வருகின்றன. அதைக் கண்டும் காணாதது போல் வெட்கமின்றி அதில் பங்கெடுத்துக் கொள்ளும் தனயன்களாய் நிற்கிறோம் நாம். மற்றொரு தாயோ, பிறந்த வீட்டிலேயே சிறைப்பட்டு கிடக்கிறாள். காவிரித் தாய்க்கு கர்நாடக மக்கள் வேறு, தமிழக மக்கள் வேறோ ? ஒரு தாய் மக்களுள் வேற்றுமை ஏது ? இடர்கால பகிர்வுப் படி நீர் வழங்கக் கூட கர்நாடக அரசு மறுக்கிறது. பிரதமர் பேச்சுக்கோ, நீதி மன்ற உத்தரவுகளுக்கோ மரியாதை இல்லை.
 
வான் மழை பொய்த்து, பயிர்கள் வாடும்போதெல்லாம், காவிரி நீரை நம்பியே காலத்தைப் போக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். வரும் காலங்களில் நீராதரங்களும், நிலத்தடி நீர்வளமும் வற்றி போகும் நிலை ஏற்பட்டால் நமக்கு மிஞ்சப்போவது, மெருக்கேற்றப்பட்ட தார் சாலைகளில் சுட்டெரிக்கும் வெயிலில் ஐம்பதடி தூரத்தில் மட்டுமே தென்படும் கானல் நீரும், மலடாய்ப் போட பூமியை நம்பி ஏமாந்து போன விவசாயியின் கண்ணீரும் மட்டுமே.
 
நீரில்லாமல் வாடுவது பயிர்கள் மட்டுமல்ல, அதை நம்பி உள்ள பல வயிறுகளும் தான் என்பதை அரசாங்கங்கள் புரிந்து கொள்ளும் நாள் எப்போது வருமோ ?

Monday, September 24, 2012

தள்ளாமை

உதிர்ந்து விழுந்த சருகைப் பார்த்து சிரித்தன
கிளையில் புதிதாய் முளைத்த இலைகள்
நாமும் ஓர் நாள் உதிர்வோம்
என்று அறியாமல் !

குறளோசை