Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, May 9, 2013

பொன் காலைப் பொழுது

குயில் குரல் கேட்டு கண் விழித்தேன்
கார்மேகமூட்டத்தினூடே 
செந்நிறப் பிழம்பாய் தோன்றியது சூரியன் 
அவ்வொளியை நோக்கி 
பறந்து கொண்டிருந்தன இரு பறவைகள் 
வெண்மலர்களின் நடுவில்
நாட்டியமாடின கருவண்டுகள்
சிறு  குன்றொன்றுக்கு அப்பால் 
செஞ்சிப்பிக்குள் பளபளத்தன வெண் முத்துக்கள்
முழு நிலவிற்குள் அடங்கி போயிருந்தன 
இவ்வனைத்தும் !

இமைகள் மெல்ல விரிகையில்,

"அத்தான்" என்ற உன் அழைப்போடு
உன் கருங்கூந்தல் என்னை வருட
உன் புருவங்களிடையில் 
பதிந்திருந்த வட்ட பொட்டு ஒளி வீச
துருதுருவென்று அலைந்து கொண்டிருந்த 
உன் கருவிழிகளின் கீழிருந்த 
கூர் மூக்கைத் தாண்டி
செவ்விதழ் சிந்திய புன்சிரிப்போடு
உன் வட்ட முகம் பார்த்து 
விடிந்துகொண்டிருந்தது என் காலைப் பொழுது  !

Wednesday, April 3, 2013

கலைகளம்


தினம் தினம் உன்னைத் 
தீண்டிக் களிக்கின்றேன் 
ஒவ்வொரு முறையும் 
வர்ணஜாலங்கள் காட்டுகிறாய்

உன் கண்களின் மூலம் 
நான் உலகத்தை பார்க்கிறேன்

உன் மீது கொண்ட மோகம் 
காண்பவை அனைத்தையும் 
அழகாய் மிளிரச் செய்கிறது

உன் வண்ணங்களில் திளைக்கின்றேன்
நீ என்னை மீண்டும் மீண்டும்
பூரிப்படையச் செய்கிறாய்

உன் வளைவுகளில் வருடி
உன்னை உசுப்பேற்றி
நடுக்கமின்றி இறுக்கி அணைத்து 
என் ஆள்காட்டி விரல்கொண்டு
அழுத்திய நொடி
உன் முத்த சத்தத்துடன் பிரசவிக்கிறது
நான் எடுத்த வண்ண புகைப்படம் !

காமிரா என் காதலி !! :)

Thursday, February 14, 2013

காதலர் தினம்

படபடக்கும் என் இதயத் துடிப்பை
பக்குவப்படுத்த முயல்கிறது 
என் மார்போடு அணைத்திருந்த 
வாழ்த்து அட்டையும் 
ரோஜா மொட்டும் !

ஆயிரம் கதைகள் பேசினாலும்
உள்ளத்தில் உள்ளதை மட்டும் 
மறைக்கும் உன் கண்களை
காட்டிக் கொடுக்கிறது
உன் புத்தகத்திலிருந்து எட்டிப் பார்க்கும் 
செவ்விதயம் பொரித்த கைக்குட்டை !

வார்த்தைகளை விழுங்கிவிட்டு 
பார்வைகளை மட்டுமே
பரிமாறிக்கொண்டிருந்த 
நம் இருவரின் மௌனத்தையும் 
கலைத்துவிட்டு போகிறது 
தென்றல் காற்று !

எதுவும் பேசாத போதும் 
எல்லாம் புரிந்ததாய் 
சிரித்துக் கொள்கிறோம் !

உன் கண்முன்னே மலர் நீட்டி 
"நீ என் உயிரோடு கலப்பாயா ?"
என்று நான் கேட்ட நொடி 
நான் ஆண்மகன் என்றும் உணராமல்
வெட்கப்படுகிறது என் உள்ளம் ! 

அதை நீ வாங்கிக் கொண்டபோதே
சம்மதம் தெரிவித்தது 
உன் விழியில் வழிந்த கண்ணீர் !

உன்னிடம் கேட்காமலேயே 
நீ எனக்காக கொண்டு வந்திருந்த 
கைக்குட்டை எடுத்து 
உன் கண்ணீர் துடித்தன என் விரல்கள் !

இது போதும் அன்பே 
நாம் காதலில் வென்றுவிட்டோம் 
காலத்தையும் வென்றுவிட்டோம் !

Thursday, January 24, 2013

ஆர்வக் கோளாறு

என் பார்வையின் ஓரத்தில்
காற்றில் மிதந்தது குப்பைக் காகிதம்
சிறு பறவையோ என்றெண்ணி
சட்டென்று திரும்பி ஏமாந்தன என் விழிகள் !

என் சாலையின் ஓரத்தில் 
இலைகளையும் கிளைகளையுமே வெறித்துப் பார்த்துக் கொண்டும், 
எதிர்வரும் வாகனங்களைக் கண்டு விலகக்கூடத் தோன்றாமல் 
அதன் வண்ணங்களை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறது என் மனது !

என் ஜன்னலின் ஓரத்தில்
அமாவாசை என்று கூட அறியாமல்  
நிலவின் வருகைக்காக 
ஏங்கித் தவிக்கிறது என் எண்ணம் !

கா கா என்று கரைந்தபோது 
தடி கொண்டு விரட்டியவன் 
இன்று அந்த குரல் கேட்டவுடன் 
சற்றும் சலனமின்றி அருகில் சென்று நோட்டமிடுகின்றேன் !

"அங்க என்ன நிலாவா காயுது ?"
என்ற என் மனைவியின் கேள்வி
காதில் விழாதவனாய் மொட்டை மாடி வெயிலில்
வட்டமிடும் பருந்தை வேடிக்கை பார்த்து நிற்கின்றன என் கால்கள் !

நேற்றுவரை சாதாரணமாகத் 
தோன்றியவை எல்லாம்
திடீரென்று வியக்க வைக்கிறது 
இன்று முதல் !

இது என்ன மன நோயா ?

ஆம் - விழி உறங்கும்பொழுது கூட 
மனம் உறங்கவிடாமல் துடிக்க வைக்கிறது
நான் புதியதாய் வாங்கிய 
நிழற்படக் கருவி  !!

Monday, October 8, 2012

ஏக்கம்

சகியே,
உன் சுட்டெரிக்கும் பார்வை தன்னில்
சொக்கித் தான் போனேனடி
சட்டென்று தோன்றவில்லை
சங்கத்தமிழ் கவிதை சொல்ல

உன் தாவணியின் வண்ணங்களில்
வானவில்லை கண்டேனடி
வான்மழையை காணவில்லை
மேகங்களில் தூது செல்ல

உன் காலடியில் தவமிருந்து
காலங்கள் கரைந்ததடி
உன் எண்ணங்களில் மாற்றமில்லை
என் காதல்தனை ஏற்றுகொள்ள !

Sunday, July 24, 2011

தேடல்..

பகலிலும் உதிக்கும்
நிலவு நீ !

துயிலெழுந்த பின்னும் தொடர்கின்ற
கனவு நீ !

பூவுக்குள் வீசும்
புயல் மழை நீ !

புன்னகையால் பேசும்
புது மொழி நீ !

மண்ணிலும் தோன்றும்
மின்னல் நீ !

விண்ணிலும் முளைக்கும்
மலர்க் கொடி நீ !

தேடுகிறேன் உன்னை
என் கண்மணிகள் தேயும் வரை
வாடுகிறேன் அன்பே
நீ என் வாசல் சேரும் வரை !!

Sunday, July 10, 2011

மாயை

நிலவிடம் ஒளியை
கடன் வாங்க நினைதேன்,
பிறகு தான் அறிந்தேன்
நிலவே ஒரு கடனாளி என்று..

தேன்கூட்டுத் தேனை
களவாட நினைத்தேன்,
பிறகு தான் அறிந்தேன்
தேனீயே ஒரு களவாணி என்று..

உலகையே எனக்கு
சொந்தமாக்க நினைத்தேன்,
பிறகு தான் உணர்தேன் - என்
உயிரே எனக்கு சொந்தமில்லை என்று !!

Tuesday, July 5, 2011

சொல்லத்தான் நினைக்கின்றேன்..

அடிக்கடி அலைபேசினாய் - உன்
கண்களால் வலை வீசினாய் - என்னை
காதலால் விலை பேசினாய் !
 
மலை என்று நினைத்திருந்தேன் - நான்
மடுவென்று உணர்த்திவிட்டாய்
வானுயர நின்றிருந்தேன் - உன்
வார்த்தைகளால் வீழ்த்திவிட்டாய் !
 
ஆயிரம் பேர் மத்தியிலே
அனல் வீசப் பேசியவன் - உன்
காதருகே பேசக் கூட
கண்டபடி யோசிக்கிறேன் !
 
சூழ்நிலையின் சூழ்ச்சிதனில் - நான்
சுண்டெலியாய் மாட்டிக்கொண்டேன்
நம் காதலதன் கைப்பிடியை
காலத்திடம் விட்டுவிட்டேன் !
 
காத்திருப்பேன் கண்மணியே
கதிரவனின் பார்வை பட
பூத்திருப்பேன் பொன்மணியே
பொன்காலை விடியல் வர !!

Friday, May 6, 2011

எதுகையோ ? மோனையோ ?

கவிதைகளால் வர்ணிக்க நினைத்தேன்
உன்னை - ஆனால்
வார்த்தைகளுக்குக் கூட பிடிக்கவில்லை
என்னை !

'கண்களைப் பார்த்து பேசு' என்றது
சிறப்பியல்பு மேம்பாட்டு நூல்;
உன் கண்களைப் பார்த்ததும்
ஊமையாய் போனது என் மனதில் எழுந்த சொல் !

காவிரி ஆறாய் பொங்கி வந்த
என் காதல் மொழி,
கார்ப்பரேஷன் குழாய் போல் காற்று விட்டது
நீ அருகில் வந்த நொடி !

சொன்னால் விழுமோ செருப்படி ?
அதிலிருந்து தப்பிப்பது எப்படி ? :-)

Tuesday, April 26, 2011

காணவில்லை..

புழுதி மண்ணில் புரண்டு ஆடிய
பேந்தா கோலி,
பம்பரக் கயிற்றில் சேர்த்த
சோடா மூடி,
கவட்டை குச்சியால் பந்தயம் ஓட்டிய
பேட்டரி வண்டிகள்,
தெருவெங்கும் பொறுக்கி சேர்த்த
சிகரெட் அட்டைகள்,
சீட்டுக் கட்டில் உருவாக்கிய
கோபுரங்கள்,
மூச்சிறைக்க ஓடி ஆடிய
எறிக்குச்சி ஆட்டம்,
அடி வாங்கிக் கொண்டே ஆடிய
பே பே பந்து,
தண்டவாள காசு,
பம்பாய் மிட்டாய் வாட்சு,
என் பால்யத்தோடு தொலைந்து போன
விளையாட்டுக்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ..

Monday, April 25, 2011

சந்தேகம்

மரமே இல்லாமல் பூத்துக் குலுங்கும்
நட்சத்திரப் பூக்கள்,
ஏற்றுவார் இன்றி எரிந்துக்கொண்டிருக்கும்
சூரிய தீபம்,
விலாசம் தெரியாமல் அலைந்துக்கொண்டிருக்கும்
விண்மீன் கூட்டம்,
அறிவியலுக்கே தெரியாத
அண்டத்தின் ரகசியங்கள்,
அனைத்தையும் மிஞ்சியது
மழலையின் சந்தேகம்,
"நிலாவுக்கு லைட்டு போட்டது யாரும்மா ?"   

Wednesday, April 20, 2011

அழகு

மழலைச் சிரிப்பு,
மாலைக் கதிர்,
சுடும் வெயிலில் சிறு தூறல்,
ஆடும் மயிலின் விரி தோகை,
பருவப் பெண்ணின் நாணம்,
நீலம் பூத்த வானம்,
கடலுக்கு அலை,
கோவிலுக்கு சிலை,
கற்றை குழல்,
ஒற்றை தாமரை,
எனக்கு நீ,
உனக்கு ?

குறளோசை