Monday, October 8, 2012

தனி மனித ஒப்பீடு

பரிணாம வளர்ச்சியின் முதுகெலும்பாக கருதப்படுவது "ஒப்பீடு". மனித வாழ்க்கையின் சிறு சிறு அறிதலிலும் புரிதலிலும் ஊடுருவிப் பார்த்தால் நாம் சென்றடையும் மையக் கருத்தாக்கம் இந்த "ஒப்பீடு" தான் (குழந்தை தாய்க்கும், தந்தைக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்வது ஒப்பீடு மூலம் தான் என்பது ஒரு உதாரணம்). ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைச் சுற்றி உள்ளவற்றுடன் தன்னை ஒப்பிட்டு தான் தன்னை புரிந்து கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் முயல்கிறான் என்கிறது "சமூக ஒப்பீடு கோட்பாடு" (Social Comparison Theory). இந்த ஒப்பீடு வெளியிலிருந்து நமக்குள் திணிக்கப் பட்டால், அது ஏற்படுத்தும் விவரிக்க முடியாத அழுத்தங்களைப் பற்றி நான் சொல்ல விழைவது தான் இந்த "தனி மனித ஒப்பீடு" (Individual comparison).

ஒப்பீடுகளின் நன்மை தீமைகளை அலசி ஆராய்வதற்கோ, தர்க்கம் செய்வதற்கோ இங்கு இதை நான் எழுதவில்லை. ஒப்பீடுகள் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்வது எப்படி என்ற வலையைப் பின்ன நான் கொடுக்கும் ஒரு சிறு நரம்பு தான் இந்த கட்டுரை. மற்றவர்களோடு நம்மை நாமே ஒப்பிட்டு நம் ஆற்றலை புரிந்து கொள்ள முயற்சிப்பதற்கும், அது மற்றவர்கள் மூலம் நம் மீது திணிக்கப்படும்போது ஏற்படும் விளைவுகளுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன. இது ஏதோ சாமானியனுக்கு மட்டும் ஏற்படும் அனுபவம் அல்ல. பல சாதனைகள் புரிந்தவர்களும் சந்திக்கும் ஒருவகையான நிர்பந்தம் தான் இந்த தனி மனித ஒப்பீடு. ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று நாம் நினைத்தாலும், அவர்களுக்கு அது பழகிப் போய் விடுகிறது என்பதுதான் உண்மை.

இதன் அடிப்படையை விளக்க ஒரு பழமொழியை உதாரணமாக கொள்வோம்:

"உயர உயர பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகாது"

இதைப் படிக்கும்போதோ, எழுதும்போதோ எனக்கு எப்பொழுதும் ஏற்படும் ஒரு சந்தேகம், "குருவியை பருந்தோடு அனாவசியமாக எதற்காக ஒப்பிட வேண்டும் ?" என்பது தான். ஒரு குருவி அதன் தகுதியை மீறி கடும் முயற்சியால் இவ்வளவு உயரம் பறக்கிறதே என்று பாராட்டுபவர்களை விட, அதைக் கழுகுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுபவர்களே அதிகம் உள்ளனர். இது போன்ற விமர்சனங்கள் இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தும்; ஒன்று - தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex), இரண்டு - மனச்சோர்வு (Dejection). 

இதில் தாழ்வு மனப்பான்மை நம்முடைய திறமைகளை வெளிக்கொணர உதவும் உந்து சக்தியை குறைத்துவிடும். மனச்சோர்வோ, நாம் எது செய்தாலும் அது பாராட்டப்பட போவதில்லை என்று மற்றவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும். இது பின்னாளில் நாமும் இது போலவே மற்றவர்களை பாராட்ட தெரியாமலும், மட்டம் தட்டும் மனோபாவத்தையும் கொண்டவர்களாக வளரவே வழி வகுக்கும்.

"அவனப் பாரு எப்படி படிக்கிறான்னு. நீயும் இருக்கியே", "அவன் அவன் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறான். உன்னால ஏன் முடியல ?", "நீ விளையாடி கிழிச்சது போதும், அவள மாதிரி எப்ப பர்ஸ்ட் ரேங்க் வாங்கப் போற", போன்ற வசனங்கள் (வசவுகள்) நாம் பெரும்பாலும் கேட்டுப் பழகியவையே. இவை இது வரை யாருக்கும் நேர்மறையான விளைவுகளைத் தந்ததில்லை. மாறாக இப்படி சொல்பவர்களின் மேல் வெறுப்பைத் தான் ஏற்ப்படுத்தி இருக்கின்றன. இதற்கு பதிலாக, "நீ நல்லா தான் விளையாடுற. கூடவே படிப்பையும் கவனிச்சா இன்னும் நல்லா வருவ", "நீ வாங்குற சம்பளம் இப்பதைக்கு போதும் தான். ஆனா இன்னும் நல்ல வேலைக்கு முயற்சி பண்ணலாமே" போன்ற அக்கறையான வார்த்தைகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.

திட்டி வேலை வாங்குவதை விட, தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது சிறந்தது என்பது போல, ஒப்பிட்டு குறை சொல்வதை விட, ஊக்குவித்து கற்பிப்பதே சிறந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ ?

1 comment:

Poornima said...

Reading some good tamil after a long time!! Keep writing..

குறளோசை

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.