இதோ இன்னொரு புதிய
முயற்சி. ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்ற எனது வெகு நாள் வேட்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க இங்கே தொடக்கப்புள்ளி வைக்கிறேன். தவறுகளிலிருந்தும்
விமர்சனங்களிலிருந்தும் தான் சிறந்த கற்றலும் கலையும் வசப்படும் என்ற நம்பிக்கை
உடையவன் நான். எனவே, குறை நிறைகளை
வெளிப்படையாக பின்னூட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால்
மற்றவர்களுக்கு பகிரவும். வாசிப்பிற்கு நன்றி.
- சுகன் ராஜ் பாரதி
1. புழுதி பறந்தது
வேலும் வாளும் உரசும்
சத்தம் விண்ணைப் பிளந்து கொண்டிருந்தது. எங்கு காணினும் மறவர் கூட்டம் மனித வலிமையின்
வரம்புகளை மீறி ஆயுதங்களை செலுத்திக் கொண்டிருந்தது. விற்களிலிருந்து புறப்பட்ட
பாணங்கள் புற்றீசலைப் போல் புறப்பட்டுச் சென்று இருபுறமும் வீரர்களை பதம் பார்த்துக்
கொண்டிருந்தன. இந்த பாணங்களின் வீச்சில் சிதைந்து போனது மனித உயிர்கள் மட்டுமல்ல.
வேல் தாங்கிய வீரர்களைக் கூட புழுவைப் போல் நசுக்கி தும்பிக்கையில் பந்தாடிக்
கொண்டிருந்த யானைகளையும், குண்டும் குழியும் தாண்டி, தாக்க வரும் வீரர்களினூடே லாவகமாய்
புகுந்து ஓடி தன்மேல் அமர்ந்து ஈட்டி வீசும் வீரனைப் பாதுகாத்து வந்த புரவிகளையும்
துளைத்துச் சென்றது விண்ணிலிருந்து பெய்த கணை மழை.
ஆம். அது ஒரு போர்க்களம்.
வீரம் செறிந்த பூமி. இன்னுயிரை துச்சமாக மதித்து தாய் நாட்டிற்காகப் போரிட்டுக்
கொண்டிருந்த படைகளின் சங்கமம். "மெய்வேல் பறியா நகும்" என்ற
பொய்யாமொழிப் புலவன் வாக்கைப் போல் தன் மேல் பாய்ந்த வேலைப் பிடுங்கி போரிடும்
மாவீரர்களைக் கண்ட பூமி. கொட்டும் குருதி காயும் முன்னே வெட்டும் கரங்கள் பாயும்
களமாக அது இருந்தது. மார்பில் விழுப்புண் பெறவேண்டும் என்று கவசங்களைத் துறந்து வாள்வீசிக்
கொண்டிருந்தக் கூட்டம் அது.
இருபுறமும் சளைக்காத படைகள்.
ராட்சதத் தேர்ச்சக்கரங்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலாட்படை வீரர்களை
எண்ண நமக்கு நேரம் போதாது. இருந்தும் அந்த களத்தில் வெற்றிடம் இல்லை. படைகள்
தாங்கியிருந்த கொடிகள் இல்லையேல் எதிரிகளைக்கூட இனம் காண முடியாத அளவிற்கு
வீரர்களால் நிரம்பி வழிந்த நிலப்பரப்பு.
தேர்களும் குதிரைகளும் யானைகளும் காலடிகளும் ஓடிய ஓட்டத்தில் எதிர் நின்ற செம்பரிக் குன்றுக்கும் மேலெழும்பி அங்கே புழுதி பறந்தது. எதற்கு இந்த போர்? அந்தப் புழுதிக்கும் நடுவே ஓர் கருப்பு குதிரையில் எந்தப் பிடிமானமும் இன்றி இரு கைகளாலும் வேல் சுழற்றும் இந்த இளங்காளை யார்? அவன் நெற்றியில் வழிவது வியர்வையா குருதியா என்பதறியாமல் எதையும் பொருட்படுத்தாமல் எதை நோக்கி முன்னேறிச் செல்கிறான்? இவன் செல்லும் திசையின் எதிரில் இரு தந்தம் கொண்ட முரட்டு யானையின் மீதமர்ந்து போரிடும் மாவீரர் யார்? அவர் கண் அசைவிற்கு கிளர்ந்து போரிடும் படைகளின் தளபதியோ? அந்த யானையை நோக்கி ஆக்ரோஷமாய் விரையும் குதிரை வீரனின் நோக்கம் என்ன?
2 comments:
Kadhaiyum ezhutha aarambichitya. Nalla irukku thodaroda neelathai adhiga paduthu da takkunu mudunchuttu …
மிக்க நன்றி நண்பா.. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்..
Post a Comment