2. செம்பரிக் குன்று
பரந்த பாரத தேசத்தில்
அசோகச் சக்ரவர்த்தி கோலோச்சிய காலத்தில், தமிழ் கூறும் நல்லுலகு சங்க கால சேர, சோழ,
பாண்டியர்களாலும், சத்ய புத்திரர்களாலும் ஆளப்பட்ட தென்புலத்து பெருநிலமாக
விளங்கியது. தமிழகத்தின் வடகோடி எல்லையில் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின்
அடிவாரத்தில் சோழர் ஆளுகைக்குட்பட்ட சிறிய தேசம் தான் செம்பவள நாடு. செம்பவள நாட்டிற்கும்
மௌரியப் பேரரசின் நிலப்பரப்பிற்கும் இடையிலான எல்லையை வரையறுக்கும் மலைத்தொடரின்
பெருங்குன்றாய் எருமை போன்ற வடிவில் உயர்ந்து நின்றது இந்த செம்பரிக் குன்று. "பரி
என்றால் குதிரை அல்லவா?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
இந்தக் குன்றுக்கு
தெற்கில் அமைந்த செம்பவள நாடு ஒரு செம்மண் பூமி. "தானுவந்து பொய்க்காமல் மாரி
பொழிதலும் வேருவந்து நிற்காமல் வளம் கொழித்தலும்.." என்று பாடல் பெற்ற
நிலவளமும் நீர்வளமும் கொண்ட நாடு. இதற்கு எதிர்மறையாக இந்த மலைப்பகுதிக்கு அப்பால்
உள்ள நிலப்பகுதி ஒரு வறண்ட பீடபூமியாக விளங்கியது. பல காலமாக எருமை வடிவிலான இந்த
குன்றின் மேல் எமதர்மன் அமர்ந்து ஆட்சி செய்வதாகவும் அவன் பார்வை வடக்கு நோக்கி
இருப்பதால் தான் அந்த நிலம் வறண்டு போனதாகவும் செம்பவள நாட்டு மக்கள் நம்பி
வந்தனர். எமனின் பார்வை தங்கள் பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக சூரியன்
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் தக்ஷிணாயன காலத்தின் ஆரம்பமான ஆடி மாதத்தில்
மலை உச்சியில் தீபம் ஏற்றி படையலிட்டு வணங்கி வந்தனர் ஒரு சாரார். அதனால் இந்தக்
குன்று வெகுகாலம் எமனேறும் பரிக்குன்று (எமன்+ஏறும்+பரி என்பது எமதர்மனின் வாகனமான
எருமையைக் குறித்தது) என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் செம்மண் மற்றும் சிவப்பு
நிற பாறைகளால் சூழப்பட்டிருந்ததால் காலப்போக்கில் அது செம்பரிக் குன்றாய் மாறிப்போனது.
சிறு தேசமாயினும் இந்த
செம்பவள நாடு சுற்றியிருந்த பல தேசத்து அரசர்களின் கண்களை உறுத்திக்கொண்டே
இருந்தது. அதற்கு காரணம், சோழர் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பகுதி ஆயினும், தனித்து
இயங்கும் சுதந்திரத்தையும் செல்வாக்கையும் பெற்ற நாடாகத் திகழ்ந்தது. தென்
மேற்கில் சத்ய புத்திரர்களோடும், மேற்கில் கேரள புத்திர தேசம் என்று அழைக்கப்பட்ட
சேர நாட்டோடும், வடக்கே மௌரிய ஆட்சியின் கீழமைந்த பல தேசங்களோடும் வணிக உறவு
இருந்தது செம்பவள நாட்டிற்கு. குறிப்பாக, பீடபூமிக்கு வடக்கே இருந்த பல குறுநில
மன்னர்களின் படையெடுப்பிலிருந்தும், வறண்ட தேசத்து கொள்ளையர்களின் ஊடுருவல்களிலிருந்தும்
அந்த நாட்டை காப்பாற்றி வந்தது இந்த செம்பரிக் குன்று.
இந்தக் குன்றின் வடகிழக்கு
பகுதியில் மலை உச்சியிலிருந்து உள்ளே இறங்கும் ஓர் இருண்ட குகைப்பாதை இருந்தது.
இந்தப் பாதை எங்கே செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது. உள்ளே இறங்க
முயற்சித்தவர்கள் யாரும் மீண்டு வரவில்லை என்றும், உள்ளே சென்ற மறுநொடி தீப்பந்தங்கள்
தாமாக அணைந்து விடுவதாகவும் ஒரு பேச்சு இருந்தது. வீராதி வீரர்கள் பலர் மாண்டு
போனதாகக் கூறப்பட்டது. மேய்ச்சலுக்கு செல்லும் கால் நடைகளும் காணாமல் போவதால் தீபம்
ஏற்றும் நாளைத்தவிர மற்ற நாட்களில் மக்கள் அந்த மலை உச்சிக்கு செல்லவே பயந்தனர். ஆகையால்
அந்தப் பாதையை பலரும் பாதாள உலகத்தின் திறவுகோல் என்றும், நரகத்தின் வாசற்படி
என்றும் அழைத்து வந்தனர். அந்த மர்மத்தை உடைக்கும் ஒருவன் பிறக்காமலா போய்
விடுவான்? என்று செம்பவள நாட்டு மக்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர்.
- தொடரும்
1 comment:
Nice start. After short intro on Ep 1
Post a Comment