Sunday, January 29, 2023

போர்க்களம் மாறலாம் - 6. கெட்ட நிமித்தம்

5. கார்க்கோடகன் 

6.     கெட்ட நிமித்தம்

செவ்வேள் மாடத்தின் வாயிலில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. மழுவாள் கொடியோடு வீரர்கள் புடை சூழ வெண்குதிரைகள் பூட்டியத் தேர் ஒன்று வந்துகொண்டிருந்தது. மக்கள் அதன் மேல் பூமாரிப் பொழிந்தனர். அதில் திரண்ட தோள்களும், திண்ணிய மார்பும், முறுக்கிய மீசையும், அடர்ந்த தாடியும், ஒளிரும் கண்களும் கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தான் செம்பவள நாட்டின் அரசர் பவளமான் எழினி என்று நாம் சொல்லித் தெரியத் தேவையில்லை. அவர் அருகில் சற்று குள்ளமான தேகமும் பெருமை தோய்ந்த முகமுமாய் அமர்ந்திருந்தது சிங்காபுரிச் செம்மல் என்றழைக்கப்பட்ட தீரனார். செம்பவள தேசத்தின் தலைமை அமைச்சர். வடக்கே மலைக்குன்றுகளாலும், தெற்கே காடுகளாலும் சூழப்பட்டப் பெரும் முல்லை நிலத்துப் பகுதியை அதன் செழுமை அறிந்து குறிஞ்சி, முல்லை, மருத நிலப் பகுதிகள் அடங்கிய வளமான பூமியாக மாற்றியப் பெருமை பவளமான் குலத்தவரின் முன்னோர்களைச் சாரும் என்றால், சிங்காபுரி என்னும் வியத்தகு நகரை வடிவமைத்துக் கொடுத்த பெருமை தீரனாரின் முன்னோரையேச் சாரும். காலம் காலமாக பவளமான் அரசர்களின் விசுவாசிகள். அதுமட்டுமின்றி ஐம்பெருங்குழுவின் தலைமைப் பொறுப்பும் தீரனாரிடமே இருந்தது.

கோயிலுக்கு வெளியே இத்தனை பரபரப்புக்கும் காரணம் என்ன என்றறிய உருத்திரனுக்கு பேராவல். "ஐயா, நான் என்ன நடக்கிறது என்று அறிந்து வருகிறேன்", என்று வெளியே செல்ல எத்தனித்தான் உருத்திரன். "எங்கள் மாமன்னர் வந்திருக்கிறாரப்பா. இளவேனிற்காலம் தொடங்கி விட்டதல்லவா? இந்த ஊரே இனி விழாக்கோலம் பூண இருக்கிறது. இம்மாதத்தின் முழு நிலவு நாளன்று இங்கே பூரணைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளைக் காண அமைச்சர் பெருமான் தீரனார்  வருவது வழக்கம் தான். ஆனால் இன்று அரசரும் வந்திருக்கிறார் என்றால் முக்கியமான காரணமாகத்தான் இருக்க வேண்டும். எப்படியும் இங்கு தான் வருவார். சற்று பொறு", என்றார் கார்க்கோடகன்.

கோயில் அருகில் வந்து தேர் நின்றதும் எழுந்த மன்னர், "வாழ்க செவ்வேள் ! வாழ்க செம்பவள நாடு!!" என்று முழங்கினார். "வாழ்க வாழ்க !!", என்று மக்கள் அதை எதிரொலித்தனர். அனைவரையும் வணங்கிவிட்டு தேரிலிருந்து இறங்கிய மன்னர் கம்பீரமாக செவ்வேள் மாடத்திற்குள் நுழைந்துக் கருவறையை நோக்கி நடந்தார். கோயில் முற்றத்தைப் பார்வையிட்டுக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்தார் தீரனார். கருவறையில் அவருக்கென சிறப்பு தீபாராதனைக் காட்டப்பட்டது. தீப ஒளியில் அழகாய் மிளிர்ந்தக் கந்தனைக் கண்டதும் மெய்யுருகி வேண்டினார் அரசர் பவளமான் எழினி. கூடவே தீரனாரும். அருகில் பணிவோடு நின்றிருந்தனர் கார்க்கோடகன், உருத்திரன், கோமளவல்லி ஆகிய மூவரும். பூசை முடிந்ததும், "பவளநாடுடைய கோவே வாழ்க ! சிங்காபுரிச் செம்மல் வாழ்க !!" என்று கைகூப்பி வணங்கினார் கார்க்கோடகன். அதுவரை கோயிலுக்குள் யாரையும் கவனியாத மன்னர், "யாரது கார்க்கோடகரா? உங்களைக் கண்டதில் பெருமகிழ்ச்சி என்று அருகில் வந்தார்". "இந்த ஏழையின் மேல் உங்கள் பார்வை பட்டது என் யோகம். ஆனால் உங்களை என் கண்களால் காண முடியாமல் போனது நான் செய்த பாவம்", என்றார் கார்க்கோடகன். "அது இந்த தேசத்திற்கு நேர்ந்த தீவினை. இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என்பதை இந்த வேலனும், கோட்டை காக்கும் கொற்றவையுமே அறிவார்கள்", என்று கவலை தோய்ந்தவராய் பதிலளித்தார் அரசர்.

அரசரின் இந்தக் கவலைக்குக் காரணம், சில மாதங்களுக்கு முன் அரண்மனைக்குள் இருந்த காவல் மரம் யாரோ கயவர்களால் வெட்டப்பட்டது தான். தலைநகரத்தின் காவல் மரம் வெட்டப்பட்டால் அந்த நாடே அழியும் என்று நம்பப்பட்டது அந்த நாட்களில். அத்தனைக் காவல்களையும் மீறி இதை யார் செய்திருக்கக் கூடும் என்று யாருக்கும் விளங்கவில்லை. அதன் பின், ஒருநாள் தலைமைச் சிற்பி கார்க்கோடகன் மின்னல் தாக்கி கண்களை இழந்தார். இப்பொழுதோ, செம்பவள நாட்டின் சேனாதிபதி பெயர் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் உள்ளார். இவையெல்லாம் நாடு முழுவதும் பெரும் அபசகுனமாகப் பார்க்கப்பட்டது. இதனிடையில் பூரணைத் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டுமென்ற கவலையும் அரசரை சேர்ந்து கொண்டது.

அவரை திசை திருப்பும் பொருட்டு, "கார்க்கோடகரே, கோயிலின் மராமரத்து பணிகளில் கவனம் செலுத்துங்கள். இந்த முறை பூரணைத் திருவிழாவின்போது ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான பொற்காசுகளை அரண்மனை கணக்காயரிடமிருந்து பெற்றுக் கொள்ளவும்.", என்று கூறிவிட்டு, "அரசே, நாளவை நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது", என்று அரசரிடம் கூறினார் தீரனார். உணர்ச்சிப் பிரவாகங்களுக்கு இடமில்லை தீரனாரிடம். காரியமே கண்ணாகக் கொண்டவர். "ஆம் தீரனாரே. தக்க சமயத்தில் நினைவூட்டினீர். நாங்கள் சென்று வருகிறோம்", என்று வணங்கி நின்றவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டனர் அரசரும் அமைச்சரும். அவரைப் பின் தொடர்ந்து சென்றனர் மூவரும். தேரில் ஏறிய மன்னர், ஒரு நிமிடம் திரும்பி உருத்திரனையே உற்று நோக்கினார். அதுவரை அவனை அவர் சரியாக கவனித்ததாகக் கூடத் தெரியவில்லை உருத்திரனுக்கு. இப்பொழுதோ அவனையே உற்று நோக்கவும், சிறிது குழப்பமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வோடு வணங்கி நின்றான் உருத்திரன். சிறு புன்முறுவலோடு திரும்பி தேரோட்டியிடம், "செல்லலாம்" , என்றார் அரசர். குதிரைகள் கனைக்கத் தேர் நகரத் தொடங்கியதும், "மாமன்னர் பவளமான் எழினி வாழ்க ! அமைச்சர் தீரனார் வாழ்க !!", என்ற முழக்கங்கள் மீண்டும் எழும்பி அடங்கின.

மன்னர் பார்த்த பார்வையின் பொருள் என்ன? இவ்வளவு மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னை மட்டும் அப்படி பார்க்க வேண்டிய காரணம் என்ன? இருந்தும் நம்மைப் பற்றி ஏதும் கேட்காமல் போனதன் நோக்கம் என்ன? இது நமக்கு நன்மை பயக்குமா? இப்படி பல கேள்விகளோடு நின்றிருந்தான் உருத்திரன்.

7. உதவிக் கரம்

No comments:

குறளோசை